சென்னை, ஏப். 24: தமிழ் செம்மொழி ஆய்வு மையம் அமைக்க வேறு இடமே கிடைக்கவில்லையா? என்று சட்டப் பேரவை அதிமுக கொறடா கே.ஏ. செங்கோட்டையன் கேள்வி எழுப்பினார். இது குறித்து பேரவையில் வியாழக்கிழமை நடைபெற்ற விவாதத்தில் அவர் பேசியதாவது:
இந்தியாவின் பெருமையை உலக அரங்கில் உயர்த்தியவர் சுவாமி விவேகானந்தர். சிகாகோ மாநாட்டில் பிரசித்தி பெற்ற உரையாற்றிய பிறகு 1897-ல் சென்னையில் தற்போது விவேகானந்தர் இல்லம் உள்ள இடத்தில் அவர் 10 நாட்கள் தங்கியிருந்தார். விவேகானந்தர் இல்லத்துக்கு பல்வேறு நாடுகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். உலகமே வியந்து பார்க்கின்ற, பல நூற்றாண்டாக உள்ள அந்த இல்லத்துக்கான குத்தகை 2010 வரை இருக்கிறது. ஆனால் அந்த இல்லத்தை காலி செய்யுமாறு நோட்டீஸ் அனுப்பியதாகவும், கடிதம் எழுதியதாகவும் செய்திகள் வந்துள்ளன. செம்மொழி மையம் அமைக்க வேறு இடமே கிடைக்கவில் லையா? விவேகானந்தர் இல்லத்தை அதே இடத்தில் செயல்பட அனுமதிக்க வேண்டும் என்றார்.
ஞானசேகரன் (காங்கிரஸ்):
நல்ல திட்டங்கள் வரும்போது அதற்கு சிலர் தடையாக இருக்கிறார்கள். விவேகானந்தருக்கு கன்னியாகுமரியில் நினைவுச் சின்னம் உள்ளது. அவர் நினைவாக கல்லூரிகள் உள்ளன. அதனால் விவேகானந்தர் இல்லத்தில் தாற்காலிகமாக தமிழ் செம்மொழி மையத்தை அமைக்கலாம். செம்மொழி மையம் சென்னை நகரின் மையத்தில் அமைவதுதான் நல்லது.
கி. ஆறுமுகம் (பாமக):
விவேகானந்தர் தியானம் செய்த இடத்தைத் தவிர அந்த வளாகத்தில் உள்ள மற்ற இடத்தில் தமிழ் செம்மொழி மையம் அமைக்கலாம்.
கம்பம் ராமகிருஷ்ணன் (மதிமுக):
ஆன்மிகத்தில் நம்பிக்கை இல்லாத கம்யூனிஸ்ட்டுகள் ஆளும் மேற்கு வங்கத்தில் ராமகிருஷ்ண மடத்தை புதுப்பிக்க அந்த மாநில அரசு ரூ. 21 கோடி ஒதுக்கியுள்ளது. விவேகானந்தர் இல்லத்தை பழைய இடத்திலேயே செயல்பட அரசு அனுமதிக்க வேண்டும்.
செல்வம் (விடுதலைச் சிறுத்தைகள்):
ராமகிருஷ்ண மடத்துக்கு சென்னையில் தியாகராயர் நகர், மயிலாப்பூர் என்று பல இடங்களில் சொத்துக்கள் உள்ளன. அங்கு அவர்கள் விவேகானந்தர் பற்றிய கண்காட்சியை வைத்துக் கொள்ளலாம். விவேகானந்தர் இல்லத்தில் தமிழ் செம்மொழி மையம் அமைப்பதுதான் சரியானது.
Friday, April 25, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment