Saturday, April 26, 2008

டி.ஆர். பாலுவுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்: இல. கணேசன்

சென்னை, ஏப். 25: மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலுவுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் என்று பாஜக மாநிலத் தலைவர் இல.கணேசன் தெரிவித்தார். இது தொடர்பாக வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:

பொது வாழ்க்கையில் இருப்பவர்கள் குற்றச்சாட்டுகளுக்கு அப்பாற்பட்டவர்களாக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அதிகாரத்தில் உள்ளவர்கள் மக்களின் நலனுக்காக தனது அதிகாரத்தைப் பயன்படுத்த வேண்டும். ஆனால் தனது குடும்பத்தினரின் நிறுவனம் லாபம் பெற வேண்டும் என்பதற்காக பெட்ரோலியத் துறையிடம் மத்திய அமைச்சர் டி.ஆர். பாலு சலுகை பெற்றதாக ஊடகங்கள் பகிரங்கமாக குற்றஞ்சாட்டியுள்ளன.

இதுபோன்ற குற்றச்சாட்டுகளுக்கு ஆளானவர்கள் அதற்காக வருத்தப்பட வேண்டும். ஆனால் நான் செய்ததில் என்ன தவறு என்று சவால் விட்டிருப்பது ஆணவத்தின் வெளிப்பாடு. இதற்காக பிரதமர் அலுவலகம் எட்டு முறை பெட்ரோலியத் துறை அமைச்சகத்துக்கு கடிதம் எழுதியுள்ளது.

இதுகுறித்து, மாநிலங்களவையில் கேள்வி கேட்ட எதிர்க்கட்சி எம்.பி.யை வெளியே அனுப்பி இருக்கலாம். தன்னை கேள்வி கேட்க யாரும் இல்லை என்று டி.ஆர். பாலு மனப்பால் குடிக்கலாம். ஆனால் நாடாளுமன்றத்துக்கு உள்ளே அனுப்பாமல் தடுக்கும் சக்தி மக்களுக்கு உண்டு என்பதை தேர்தல் நேரத்தில் நிரூபிப்பார்கள் என்று இல.கணேசன் கூறியுள்ளார்.

டி.ஆர். பாலுவை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும்: வைகோ

சென்னை, ஏப். 25: மத்திய அமைச்சர் பதவியில் இருந்து டி.ஆர். பாலுவை நீக்க வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வற்புறுத்தியுள்ளார். இது தொடர்பாக வெள்ளிக்கி ழமை அவர் வெளியிட்ட அறிக்கை:

மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு தனது மகன்களால் நிர்வகிக்கப்படும், "கிங்ஸ் இந்தியா பவர் கார்ப்பரேசன்', "கிங்ஸ் இந்தியா கெமிக்கல் கார்ப்பரேசன்' ஆகிய நிறுவனங்களுக்கு இந்தியன் ஆயில் மற்றும் எரிவாயு கழகத்தின் மூலம் எரிவாயு ஏற்பாடு செய்துள்ளார். இதன் மூலம் அவர் தனது அமைச்சர் பதவியைப் பயன்படுத்தி அதிகார துஷ்பிரயோகம் செய்துள்ளார்.

2007-ம் ஆண்டு மார்ச் 1-ம் தேதி இந்திய எரிவாயு ஆணையத்தின் தலைவர் யு.டி. சௌபே-வை அழைத்து, தனது நிறுவனங்களுக்கு எரிவாயு சப்ளை செய்யுமாறு இந்தியன் ஆயில் மற்றும் இயற்கை எரிவாயு சப்ளை கழகத்தின் தலைவர் ஆர்.எஸ். சர்மாவுக்கு கடிதம் எழுதுமாறு டி.ஆர்.பாலு வற்புறுத்தியுள்ளார். அதன்படி யு.டி. சௌபே, ஆர்.எஸ். சர்மாவுக்கு 2007-ம் ஆண்டு மார்ச் 2-ம் தேதி எழுதிய கடிதத்தில், 2006-ம் ஆண்டு ஜூன் 28-ம் தேதி பெட்ரோலியத் துறை அமைச்சர் முன்னிலையில் டி.ஆர். பாலு தனது குடும்ப நிறுவனங்களுக்கு எரிவாயு வழங்க கோரியுள்ளதைச் சுட்டிக் காட்டியுள்ளார். இதன் மூலம் தனது அமைச்சர் பதவியை குடும்ப நலனுக்கு பயன்படுத்தியது உறுதியாகியுள்ளது.

மத்திய அமைச்சர் போன்ற பதவியில் இருப்பவர்கள் தங்களின் நலனுக்கோ, தங்கள் குடும்ப நலனுக்கோ அப்பதவியை பயன்படுத்தக் கூடாது. அவ்வாறு பயன்படுத்துவது, தான் ஏற்றுக் கொண்ட பதவிப்பிரமாணத்துக்கு முற்றிலும் விரோதமாகும். இதன் மூலம் மத்திய அமைச்சராக நீடிக்கும் தார்மிக உரி மையை டி.ஆர். பாலு இழந்து விட்டார். இதனால் மத்திய அரசின் நம்பகத்தன்மை கேள்விக்குறியாகி விட்டது. எனவே டி.ஆர்.பாலு அமைச்சர் பதவியில் இருந்து ராஜிநாமா செய்ய வேண்டும். இல்லையெனில் அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று வைகோ தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

வருமானம் இல்லாத கோயில்களுக்கு இலவச மின்சாரம்

சென்னை, ஏப். 25: வருமானம் இல்லாத கோயில்களுக்கு இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என்று அதிமுக எம்.எல்.ஏ. கணபதி கோரிக்கை விடுத்தார். சட்டப் பேரவையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தொழிலாளர் நலன் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் அவர் பேசியதாவது:

தமிழகத்தில் வருமானம் இல்லாத கோயில்களுக்கு இலவச மின்சாரம் வழங்க வேண்டும். அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட அன்னதானத் திட்டம் தற்போது சரியாக செயல்படவில்லை. அதிமுக ஆட்சியில் திருக்கோயில் செயல் அலுவலர்களாக பெண்கள் நியமிக்கப்பட்டனர். பழனியில் ரூ. 4 கோடியில் ரோப் கார் அமைக்கப்பட்டது. ரூ. 30 கோடியில் பழனியில் இருந்து கொடைக்கானலுக்கும், ரூ. 4 கோடியில் சோளிங்கரிலும் ரோப் கார் திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. அந்த திட்டம் எந்த நிலையில் உள்ளது?

கோயில் தெப்பக் குளங்களை உடனடியாக தூர் வார வேண்டும். எனது தொகுதியில் உள்ள திருவக்கரை வக்கிரகாளியம்மன் கோயிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகிறார்கள். அங்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்த சுற்றுலாத் துறை ரூ. 59.15 லட்சத்தை ஒதுக்கியுள்ளது. ஆனால் கோயிலில் இருந்து 3 கி.மீ.தொலைவில் பக்தர்களுக்கான வசதிகளை அரசு செய்து வருகிறது. இந்தப் பணிகளை கோயிலுக்கு அருகில் மேற்கொள்ள வேண்டும். திருவக்கரை கோயிலில் திருவிழா நேரங்களில் சமய சொற்பொழிவும், பட்டி மன்றங்களும் நடத்த வேண்டும். திமுக ஆட்சியில் கோயில்களில் திருட்டு போகின்றன. ஏப்ரல் 16-ம் தேதி கபாலீஸ்வரர் கோயிலில் உண்டியல் உடைக்கப்பட்டுள்ளது என்றார் கணபதி.

கம்பம் ராமகிருஷ்ணன் (மதிமுக):

நூற்பாலைகளில் திருமண உதவித் திட்டம் என்ற பெயரில் இளம் பெண்களிடம் 24 மணி நேரமும் வேலை வாங்குகின்றனர். மூன்று ஆண்டுகள் வேலை செய்தால் திருமணத்துக்கு ரூ. 25,000 தருகிறோம் என்று சொல்லி அவர்களை கசக்கி பிழிகிறார்கள். ஆனால் அந்தத் தொகையும் சரியாக வழங் கப்படுவதில்லை. அவர்களுக்கு முதல் ஆண்டு ரூ. 25-ம், இரண்டாவது ஆண்டு ரூ. 40-ம், மூன்றாவது ஆண்டில் ரூ. 60-ம் தினக்கூலியாக வழங்கப்படுகிறது. இந்த முறையை அரசு தடை செய்ய வேண்டும்.

தமிழக- கேரள எல்லையில் உள்ள கண்ணகி கோயிலில் இருந்து தமிழக போலீஸôர் அகற்றப்பட்டுள்ளனர். இதுவரை தமிழகத்தைச் சேர்ந்த அர்ச்சகர்கள்தான் கண்ணகி கோயிலில் அர்ச்சனை செய்து வந்தனர். ஆனால் இந்த ஆண்டு நம்பூதிரிகள் அர்ச்சனை செய்துள்ளனர். இது கண்டிக்கத்தக்கது. கண்ணகி கோயிலில் வழிபடும் உரிமையை தமிழக அரசு பெற்றுத்தர வேண்டும் என்றார்.

சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு ராஜீவ் காந்தி பெயர் சூட்ட வேண்டும்

சென்னை, ஏப். 25: சென்னை அரசு பொது மருத்துவம னைக்கு ராஜீவ் காந்தி பெயர் சூட்ட வேண்டும் என்று காங்கிரஸ் எம்.எல்.ஏ. அருள் அன்பரசு கோரிக்கை விடுத்தார். சட்டப் பேரவையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தொழிலாளர் நலன் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் அவர் பேசியதாவது:

1991-ம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூரில் கொல்லப்பட்ட ராஜீவ் காந்தியின் உடல் சென்னை அரசு பொது மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தது. எனவே அவரின் நினைவாக சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு ராஜீவ் காந்தி பெயர் சூட்ட வேண்டும்.

சோளிங்கர் மற்றும் பள்ளிப்பட்டில் விசைத்தறி, கைத்தறி நெசவாளர்கள் கடந்த ஒரு வாரமாக வேலை நிறுத்தம் செய்து வருகிறார்கள். அவர்களின் பிரச்னையைத் தீர்க்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சோளிங்கர் கோயிலுக்கு ரோப் கார் அமைக்கப்படும் என்று இரண்டு ஆண்டுகளுக்கு முன் அறிவிக்கப்பட்டது. ஆனால் அதற்கான பணிகள் இன்னும் தொடங்கப்பட வில்லை. அங்கு ரோப் கார் எப்போது அமைக்கப்படும்?

தமிழகத்தில் 4.78 லட்சம் ஏக்கர் நன்செய், புன்செய், மானாவாரி நிலங்கள் உள்ளன. கோயில் நிலங்களை வைத்துள்ள 38,000 குத்தகைதாரர்கள் உரிய குத்தகை தருவதில்லை. 50 ஆண்டுகளுக்கு முன்பு நிர்ணயம் செய்யப்பட்ட குத்தகைதான் இப்போதும் வசூலிக்கப்பட்டு வருகிறது.

சிவன் சொத்து குல நாசம்:

கோயில் நிலங்களை உள் குத்த கைக்கு விட்டு அதிகம் சம்பாதிக்கிறார்கள். சிவன் சொத்து குல நாசம் என்பார்கள். கொடியவர்களின் கூடாரமாக உள்ள கோயில் நிலங்களை மீட்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கோயில் நிலங்களை மீட்க கோயில் நில பாதுகாப்புக் குழு அமைக்க வேண்டும். இதற்காக அனைத்துக் கட்சி எம்.எல்.ஏக் கள் குழு அமைக்க வேண்டும் என்றார் அருள் அன்பரசு.

தூத்துக்குடி "ரோச்' பூங்காவில் படகு இல்லம்

சென்னை, ஏப். 25: தூத்துக்குடி "ரோச்' பூங்காவில் ரூ. 16 லட்சம் செலவில் படகு இல்லம் அமைக் கப்படும் என்று சுற்றுலா மற்றும் பதிவுத் துறை அமைச்சர் சுரேஷ் ராஜன் தெரிவித்தார். சட்டப் பேரவையில் வெள்ளிக்கிழமை கேள்வி நேரத்தின்போது இது குறித்து நடைபெற்ற விவாதம்:

அனிதா ராதாகிருஷ்ணன்:

தூத்துக்குடியில் உள்ள "ரோச்' பூங்காவில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் படகு இல்லம் அமைக்கப்படுமா?

அமைச்சர் சுரேஷ் ராஜன்:

தூத் தக்குடி "ரோச்' பூங்காவில் ரூ. 16 லட்சம் செலவில் படகு இல்லம் அமைக்கப்படும்.

அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் (அதிமுக):

திருச்செந்தூர் புராதனமான நகரம். பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்ட கலைநயம் மிக்க முருகன் கோயில் அங்கு உள்ளது. நாழிக் கிணறு சுற்றுலா பயணிகளை ஈர்த்து வரும் இடம். 30 மசூதிகளைக் கொண்ட காயல் மாநகர் திருச்செந்தூருக்கு அருகில் உள்ளது. புனித சவேரியார் வந்து கத்தோலிக்க கிறிஸ்தவ மதத்தை வளர்த்த மணப்பாடு என்ற ஊரும் அருகில் உள்ளது. எனவே திருச்செந்தூரை சுற்றுலாத் தலமாக அறிவிக்க வேண்டும்.

அமைச்சர் சுரேஷ் ராஜன்:

சுற்றுலாத்துறை எந்த இடத்தையும் சுற்றுலாத் தலமாக அறிவிப்பதில்லை. சுற்றுலா பயணிகள் அதிகமாக வந்தால் அங்கு அடிப்படை வசதிகள் செய்து தரப்படும். ஏற்கனவே திருச்செந்தூரில் சுற்றுலாத் துறை சார்பில் விடுதிகள் செயல்பட்டு வருகின்றன.

சென்னையில் ரூ.10.72 கோடியில் வணிக வளாகம்: ஸ்டாலின்

சென்னை, ஏப். 25: மகளிர் சுயஉதவிக் குழுக்கள் தயாரிக்கும் பொருட்களை விற்பனை செய்ய சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே ரூ. 10.72 கோடி செலவில் வணிக வளாகம் கட்டப்படும் என்று ஊரக வளர்ச்சி, உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். சட்டப் பேரவையில் வெள்ளிக்கிழமை கேள்வி நேரத்தின்போது இது குறித்து நடைபெற்ற விவாதம்:

அ. தமிழரசு (பாமக):

தமிழகத்தில் சுமார் 3,60,000 மகளிர் சுயஉதவிக் குழுக்கள் உள்ளன. அவர்கள் தயாரிக்கும் தோல் பொருட்கள், அழகு சாதனப் பொருட்கள், கொசுவலை போன்ற பொருட்களை விற்பனை செய்ய சென்னையிலும், மாவட்ட மற்றும் ஒன்றிய தலைநகரங்களிலும் வணிக வளாகம் கட்ட அரசு முன்வருமா?

அமைச்சர் மு.க. ஸ்டாலின்:

தமிழ கத்தில் உள்ள மகளிர் சுயஉதவிக் குழுக்கள் தயாரிக்கும் பொருட்களை விற்பனை செய்ய, சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே ரூ. 10.72 கோடி செலவில் 36,300 சதுர அடி பரப்பில் பொருட்காட்சி மற்றும் விற்பனை அரங்கம் கட்டப்படும். ஆசிய வளர்ச்சி வங்கியின் உதவியுடன் கட்டப்பட இருக்கும் இந்த வளாகத்துக்கு நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. மகளிர் சுயஉதவிக் குழுக்கள் தயாரிக்கும் பொருட்களை விற்பனை செய்ய 29 மாவட்டத் தலைநகரங்களில் "பூமாலை' வணிக வளாகங்கள் செயல்பட்டு வருகிறது.

அ. தமிழரசு:

ஓமலூர் தொகுதியில் சுமார் 1,300 மகளிர் சுயஉதவிக் குழுக் கள் உள்ளன. எனவே அங்கு வணிக வளாகம் அமைக்க வேண்டும். மகளிர் சுயஉதவிக் குழுக்கள் இடைத் தரகர்கள் இல்லாமல் பொருட்களை விற்பனை செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அமைச்சர் மு.க. ஸ்டாலின்:

அங் கொன்றும் இங்கொன்றுமாக இடைத்தரகர்கள் பிரச்னை இருக்கிறது. இடைத்தரகர்களை ஒழிக்க கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு சுழல்நிதி வழங்க ரூ. 150 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

1,707 வேளாண் அலுவலர்கள் விரைவில் நியமனம்

சென்னை, ஏப். 25: வோளாண் துறையில் 1,707 வேளாண் அலுவலர்கள் விரைவில் நியமனம் செய்யப்படுவார்கள் என்று வேளாண் துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் தெரிவித்தார். சட்டப் பேரவையில் வெள்ளிக்கிழமை கேள்வி நேரத்தின் போது இது குறித்து நடைபெற்ற விவாதம்:

ஞானசேகரன் (காங்கிரஸ்):

வேலூர் மாவட்டம் ராணிப் பேட்டை யில் "நவ்லாக்' தோட்டக்கலை பண்ணை உள்ளது. எனவே அங்கு வேளாண் கல்லூரி அமைக்க வேண்டும். தமிழகத்தில் வேலை இல்லாத வேளாண் பட்டதாரிகளின் எண்ணிக்கை எவ்வளவு? அவர்களுக்கு வேலை வழங்க அரசு நடவடிக்கை எடுக்குமா?

அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம்:

தமிழகம் முழுவதும் 5,520 வேளாண் பட்டதாரிகள் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துள்ளனர். 1,648 வேளாண் பட்டதாரிகள் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் பதிவு செய்துள்ளனர். 520 வேளாண் அலுவலர்களையும், 47 தோட்டக்கலை அலுவலர்களையும் தேர்வு செய்ய தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையத்தை கேட்டுக் கொண்டுள்ளோம். வேளாண்துறையில் காலியாக உள்ள 1,707 வேளாண் அலுவலர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்.

வீ.ஏ.டி. கலியவரதன் (பாமக):

எனது முகையூர் தொகுதியில் எந்தக் கல்லூரி யும் இல்லை. எனவே வேளாண்மைத் தொழில் கல் லூரியாவது அமைக்கப்ப டுமா?

அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம்:

தமிழகத்தில் 12 வேளாண் கல்லூரிகள் உள்ளன. இந்தக் கல்லூரிகளில் படிப்பவர்களுக்கே முழுமையாக வேலை வழங்க முடியவில்லை. தமிழகத்தில் வேளாண்மை பாடத்தை படிக்க போதுமான இடங்கள் உள்ளன. ஒரு வேளாண்மை கல்லூரி அமைக்க வேண்டுமானால் 200 ஏக்கர் நிலமும், ரூ. 150 கோடியும் தேவைப்படும். பணத்தைக்கூட எப்படியாவது திரட்டி விடலாம். ஆனால் 200 ஏக்கர் நிலத்தை உடனடியாக கையகப்படுத்துவது சாத்தியமற்றது. தமிழகத்தில் 56 சதவீத மக்கள் வேளாண் தொழிலை சார்ந்துள்ளனர். தற்போது புதிதாக வேளாண் கல்லூரிகள் அமைக்கும் திட்டம் இல்லை. எதிர்காலத்தில் இது குறித்துப் பரிசீலிக்கப்படும்.

மாவட்டம் தோறும் முதியோர் இல்லம்

சென்னை, ஏப். 25: மாவட்டம் தோறும் முதியோர் இல்லங்கள் கட்டப்படும் என்று சமூக நலத் துறை அமைச்சர் டாக்டர் பூங்கோதை தெரிவித்தார். சட்டப் பேரவையில் வெள்ளிக்கிழமை கேள்வி நேரத்தின்போது இது குறித்து நடைபெற்ற விவாதம்:

சை. சையது கௌஸ் பாஷா (திமுக):

தற்போது குழந்தைக ளால் கைவிடப்படும் பெற்றோர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தனியார் முதியோர் இல்லங்களில் எல்லோரையும் சேர்ப்பதில்லை. எனவே மதுரை உள்பட அனைத்து மாவட்டங்களிலும் முதியோர் இல்லங்களை அமைக்க அரசு முன்வருமா?

அமைச்சர் பூங்கோதை:

தமிழகத்தில் முதியோர் இல்லங்களை அரசு நடத்தவில்லை. முதியோர் இல்லங்களை நடத்தும் தொண்டு நிறுவனங்களுக்கு மத்திய, மாநில அரசுகளால் மானியம் வழங்கப்பட்டு வருகிறது.

தனிக்குடித்தனம் அதிகரித்து வருவதால் குழந்தைகளால் கைவிடப்படும் முதியோர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்தப் பிரச்னையை சமாளிக்க மத்திய அரசின் பெற்றோர், மூத்த குடிமக்கள் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும்.மாவட்டம் தோறும் முதியோர் இல்லங்களை அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது. அதற்கான நிலத்தைத் தேர்வு செய்யுமாறு மாவட்ட ஆட்சியர்களை அரசு கேட்டுக் கொண்டுள்ளது என்றார்.