Friday, April 25, 2008

குழந்தைகளை நாமே கொன்றது போலாகி விட்டது: முதல்வர்

சென்னை, ஏப். 24: திருவள்ளூர் மாவட்டத்தில் தட்டம்மை தடுப்பு ஊசி போட்டதால் இறந்த குழந்தைகளை நாமே கொன்றது போலாகி விட்டது என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்தார். இறந்த நான்கு குழந்தைகளின் குடும்பத்துக்கு தலா ரூ. 3 லட்சம் வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்தார். இது குறித்து பேரவையில் வியாழக்கிழமை கொண்டு வரப்பட்ட கவன ஈர்ப்பு தீர்மானத்துக்கு பதில் அளித்து அவர் பேசியதாவது:

ஏதும் அறியாத இளம் குழந்தைகள் மரணத்தைத் தழுவியிருப்பது உச்சகட்ட சோகமாகும். வழக்கத்துக்கு மாறாக நாமே கொன்று விட்டதைப் போன்று இந்த குழந்தைகளின் சாவு அமைந்து விட்டது. இறந்த குழந்தைகள் நந்தினி, பூஜா, மோகனப்பிரியா, லோகேஷ் ஆகியோரின் குடும்பத்துக்கு தலா ரூ. 3 லட்சம் வீதம் ரூ. 12 லட்சம் வழங்கப்படும் என்றார் முதல்வர்.

முன்னதாக இந்தப் பிரச்னை தொடர்பாக கொண்டு வரப்பட்ட கவன ஈர்ப்பு தீர்மானத்துக்கு பதில் அளித்து சுகாதாரத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பேசியதாவது:

திருவள்ளூர் மாவட்டம் பூண்டி வட்டம் கட்ச்சூர் ஆரம்ப சுகாதார நிலையம் பென்னலூர்பேட்டை கிராமத்தில் ஏழுமலை மகள் நந்தினி, வள்ளிமுத்துவின் மகள் பூஜா, மோகனின் மகள் மோகனப்பிரியா ஆகிய மூன்று குழந்தைகளும், திருவாலங்காடு ஒன்றியம் பூனிமாங்காடு ஆரம்ப சுகாதார நிலையம் வெங்கடாபுரம் கிராமத்தில் குப்பையாவின் மகன் லோகேஷ் என்ற குழந்தையும் தட்டம்மை தடுப்பு ஊசி போட்டதால் ஏற்பட்ட அலர்ஜியால் இறந்துள்ளனர்.

இது பற்றி தகவல் கிடைத்ததும் நான் அங்கு சென்று இறந்த குழந்தைகளின் பெற்றோருக்கு ஆறுதல் தெரிவித்தேன். குழந்தைகளின் மரணம் குறித்து ஆய்வு செய்ய "விரைந்து செயலாற்றும் குழு' அமைக்கப்பட்டது.

மத்தியக்குழு வருகை:

குழந்தைகளுக்கு போடப் பட்ட தடுப்பு மருந்து, கலக்கும் திரவம் ஆகியவை ஆய்வு செய்வதற்காக இமாசல பிரதேசத்தில் உள்ள மத்திய அரசின் ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. மத்திய அரசுக்கு இதுபற்றி தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய ஆய்வுக்குழு விரைவில் வரும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் 276 குழந்தைகள் உட்பட தமிழகம் முழுவதும் 20,000-க்கும் அதிகமான ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு, புதன் கிழமை (ஏப். 23) தடுப்பூசி போடப்பட்டது. அவர்கள் அனைவரும் நலமாக உள்ளனர். இந்த சம்பவத்தினால் தட்டம்மை தடுப்பூசி போடுவது தமிழகம் முழுவதும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட செவிலியர், மருந்தாளுநர் உள்ளிட்ட பணியாளர்கள் தாற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தடுப்பூசி போடப்பட்ட 5 குழந்தைகள் பயத்தின் காரணமாக திருவள்ளூர் மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டுள்ளனர். அந்த 5 குழந்தைகளும் நலமாக உள்ளனர் என்றார் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.

No comments: