சென்னை, மே 3: எய்ட்ஸ் நோயைக் கட்டுப்படுத்த மாவட்ட ஆட்சியர்கள் முக்கிய பங்காற்ற வேண்டும் என்று தலைமைச் செயலர் எல்.கே. திரிபாதி வேண்டுகோள் விடுத்தார். சென்னையில் சனிக்கிழமை நடைபெற்ற எய்ட்ஸ் பற்றிய மாவட்ட ஆட்சியர்களுக்கான மண்டல மாநாட்டில், எச்.ஐ.வி.எய்ட்ஸ் பற்றிய புத்தகத்தை வெளியிட்டு அவர் பேசியதாவது:
நாட்டை எதிர்நோக்கியுள்ள முக்கிய பிரச்னை எய்ட்ஸ். இந்தியாவில் சுமார் 25 லட்சம் எய்ட்ஸ் நோயாளிகள் உள்ளனர். அவர்களில் 2 லட்சத்து 47 ஆயிரம் பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்.எய்ட்ஸ் நோயால் பெண்களும், குழந்தைகளும் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர். எய்ட்ஸ் நோயைக் கட்டுப்படுத்துவதில் மாவட்ட ஆட்சியர்கள் முக்கிய பங்காற்ற வேண்டும். எய்ட்ஸ் ஒழிப்புக்கான திட்டங்களை மேம்படுத்துவது மாவட்ட ஆட்சியர்களின் முக்கிய பணியாகும். எய்ட்ஸ் வராமல் தடுக்க மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். மாவட்டங்களில் உள்ள எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு குழுக்கள் எய்ட்ஸ் நோய் திட்டங்களை செயல்ப டுத்த வேண்டும். எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட ஆதரவற்ற குழந்தைகளுக்காக இந்த ஆண்டு, ரூ. 5 கோடி செலவில் அறக்கட்டளை அமைக்கப்படும். மக்களிடம் சுகாதார விழிப்பு ணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றார் திரிபாதி.
தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப் பாடு சங்கத்தின் திட்ட இயக்குநர் சுப்ரியா சாகு: எய்ட்ஸôல் பாதிக்கப்பட்டவர்களுக்கு சமூக, பொருளாதார உரிமைகள் வழங்கப்பட வேண்டும். எய்ட்ஸ் நோயைக் கட்டுப்படுத்துவதிலும், தடுப்பதிலும் தமிழகம் முன்னணி யில் உள்ளது. 760 நம்பிக்கை மையங்கள், 100 பாலியல் நோய் சிகிச்சை நிலை யங்கள், 26 கூட்டு சிகிச்சை மையங்கள் (ஏ.ஆர்.டி.) தமிழகத்தில் உள்ளன. இந்த ஏ.ஆர்.டி.மையங்களில் 70,000 பேர் பதிவு செய்துள்ளனர். அதில் 40,000 பேர் கூட்டு மருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 1,800 பேர் குழந்தைகள். எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட விதவைகளுக்கு உதவித் தொகை வழங்குதல், வங்கிகளில் கடன் பெற்றுத் தருதல் போன்ற நலத் திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.
தமிழகத்தில் அதிகமான மக்கள் தானாக முன்வந்து எய்ட்ஸ் பரிசோதனை செய்து கொள்கின்றனர். இதுவரை 20 லட்சம் பேர் தாங்களாகவே முன்வந்து எச்.ஐ.வி. பரிசோதனை செய்துள்ளனர் என்றார். இந்த மாநாட்டில் 15 மாவட்ட ஆட்சியர்கள் பங்கேற்றனர். தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கத்தின் இணை இயக்குநர் டாக்டர் தாமோதர் பச்சானி, சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை செயலர் வி.கே. சுப்புராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment