சென்னை, ஏப். 25: மத்திய அமைச்சர் பதவியில் இருந்து டி.ஆர். பாலுவை நீக்க வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வற்புறுத்தியுள்ளார். இது தொடர்பாக வெள்ளிக்கி ழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு தனது மகன்களால் நிர்வகிக்கப்படும், "கிங்ஸ் இந்தியா பவர் கார்ப்பரேசன்', "கிங்ஸ் இந்தியா கெமிக்கல் கார்ப்பரேசன்' ஆகிய நிறுவனங்களுக்கு இந்தியன் ஆயில் மற்றும் எரிவாயு கழகத்தின் மூலம் எரிவாயு ஏற்பாடு செய்துள்ளார். இதன் மூலம் அவர் தனது அமைச்சர் பதவியைப் பயன்படுத்தி அதிகார துஷ்பிரயோகம் செய்துள்ளார்.
2007-ம் ஆண்டு மார்ச் 1-ம் தேதி இந்திய எரிவாயு ஆணையத்தின் தலைவர் யு.டி. சௌபே-வை அழைத்து, தனது நிறுவனங்களுக்கு எரிவாயு சப்ளை செய்யுமாறு இந்தியன் ஆயில் மற்றும் இயற்கை எரிவாயு சப்ளை கழகத்தின் தலைவர் ஆர்.எஸ். சர்மாவுக்கு கடிதம் எழுதுமாறு டி.ஆர்.பாலு வற்புறுத்தியுள்ளார். அதன்படி யு.டி. சௌபே, ஆர்.எஸ். சர்மாவுக்கு 2007-ம் ஆண்டு மார்ச் 2-ம் தேதி எழுதிய கடிதத்தில், 2006-ம் ஆண்டு ஜூன் 28-ம் தேதி பெட்ரோலியத் துறை அமைச்சர் முன்னிலையில் டி.ஆர். பாலு தனது குடும்ப நிறுவனங்களுக்கு எரிவாயு வழங்க கோரியுள்ளதைச் சுட்டிக் காட்டியுள்ளார். இதன் மூலம் தனது அமைச்சர் பதவியை குடும்ப நலனுக்கு பயன்படுத்தியது உறுதியாகியுள்ளது.
மத்திய அமைச்சர் போன்ற பதவியில் இருப்பவர்கள் தங்களின் நலனுக்கோ, தங்கள் குடும்ப நலனுக்கோ அப்பதவியை பயன்படுத்தக் கூடாது. அவ்வாறு பயன்படுத்துவது, தான் ஏற்றுக் கொண்ட பதவிப்பிரமாணத்துக்கு முற்றிலும் விரோதமாகும். இதன் மூலம் மத்திய அமைச்சராக நீடிக்கும் தார்மிக உரி மையை டி.ஆர். பாலு இழந்து விட்டார். இதனால் மத்திய அரசின் நம்பகத்தன்மை கேள்விக்குறியாகி விட்டது. எனவே டி.ஆர்.பாலு அமைச்சர் பதவியில் இருந்து ராஜிநாமா செய்ய வேண்டும். இல்லையெனில் அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று வைகோ தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment