Saturday, April 26, 2008

வருமானம் இல்லாத கோயில்களுக்கு இலவச மின்சாரம்

சென்னை, ஏப். 25: வருமானம் இல்லாத கோயில்களுக்கு இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என்று அதிமுக எம்.எல்.ஏ. கணபதி கோரிக்கை விடுத்தார். சட்டப் பேரவையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தொழிலாளர் நலன் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் அவர் பேசியதாவது:

தமிழகத்தில் வருமானம் இல்லாத கோயில்களுக்கு இலவச மின்சாரம் வழங்க வேண்டும். அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட அன்னதானத் திட்டம் தற்போது சரியாக செயல்படவில்லை. அதிமுக ஆட்சியில் திருக்கோயில் செயல் அலுவலர்களாக பெண்கள் நியமிக்கப்பட்டனர். பழனியில் ரூ. 4 கோடியில் ரோப் கார் அமைக்கப்பட்டது. ரூ. 30 கோடியில் பழனியில் இருந்து கொடைக்கானலுக்கும், ரூ. 4 கோடியில் சோளிங்கரிலும் ரோப் கார் திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. அந்த திட்டம் எந்த நிலையில் உள்ளது?

கோயில் தெப்பக் குளங்களை உடனடியாக தூர் வார வேண்டும். எனது தொகுதியில் உள்ள திருவக்கரை வக்கிரகாளியம்மன் கோயிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகிறார்கள். அங்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்த சுற்றுலாத் துறை ரூ. 59.15 லட்சத்தை ஒதுக்கியுள்ளது. ஆனால் கோயிலில் இருந்து 3 கி.மீ.தொலைவில் பக்தர்களுக்கான வசதிகளை அரசு செய்து வருகிறது. இந்தப் பணிகளை கோயிலுக்கு அருகில் மேற்கொள்ள வேண்டும். திருவக்கரை கோயிலில் திருவிழா நேரங்களில் சமய சொற்பொழிவும், பட்டி மன்றங்களும் நடத்த வேண்டும். திமுக ஆட்சியில் கோயில்களில் திருட்டு போகின்றன. ஏப்ரல் 16-ம் தேதி கபாலீஸ்வரர் கோயிலில் உண்டியல் உடைக்கப்பட்டுள்ளது என்றார் கணபதி.

கம்பம் ராமகிருஷ்ணன் (மதிமுக):

நூற்பாலைகளில் திருமண உதவித் திட்டம் என்ற பெயரில் இளம் பெண்களிடம் 24 மணி நேரமும் வேலை வாங்குகின்றனர். மூன்று ஆண்டுகள் வேலை செய்தால் திருமணத்துக்கு ரூ. 25,000 தருகிறோம் என்று சொல்லி அவர்களை கசக்கி பிழிகிறார்கள். ஆனால் அந்தத் தொகையும் சரியாக வழங் கப்படுவதில்லை. அவர்களுக்கு முதல் ஆண்டு ரூ. 25-ம், இரண்டாவது ஆண்டு ரூ. 40-ம், மூன்றாவது ஆண்டில் ரூ. 60-ம் தினக்கூலியாக வழங்கப்படுகிறது. இந்த முறையை அரசு தடை செய்ய வேண்டும்.

தமிழக- கேரள எல்லையில் உள்ள கண்ணகி கோயிலில் இருந்து தமிழக போலீஸôர் அகற்றப்பட்டுள்ளனர். இதுவரை தமிழகத்தைச் சேர்ந்த அர்ச்சகர்கள்தான் கண்ணகி கோயிலில் அர்ச்சனை செய்து வந்தனர். ஆனால் இந்த ஆண்டு நம்பூதிரிகள் அர்ச்சனை செய்துள்ளனர். இது கண்டிக்கத்தக்கது. கண்ணகி கோயிலில் வழிபடும் உரிமையை தமிழக அரசு பெற்றுத்தர வேண்டும் என்றார்.

No comments: