Thursday, April 17, 2008

வாங்கும் சக்தி உயர்ந்தால் விலைவாசி உயர்வு தெரியாது

சென்னை, ஏப். 17: சாதாரண மக்களின் வாங்கும் சக்தி அதிகரித்தால் விலைவாசி உயர்வு சுமையாக இருக்காது என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்தார். விலைவாசி உயர்வைக் கண்டித்து கம்யூனிஸ்ட், அதிமுக ஆகிய கட்சிகள் தமிழக சட்டப் பேரவையிலிருந்து வியாழக்கிழமை, வெளிநடப்பு செய்தன. அதற்கு பதில் அளித்து முதல்வர் கருணாநிதி பேசியதாவது:

விலைவாசி உயரும்போது மக்களின் வாங்கும் சக்தி அதிகமானால் அதன் சுமை தெரியாது. ஒரு காலத்தில் பவுன் விலை ரூ. ஆயிரமாக இருந்தது. இன்று ரூ. 10,000 என்ற அளவிற்கு உயர்ந்துள்ளது. சாதாரண மக்களை வாங்கும் சக்தி கொண்டவர்களாக மாற்றிவிட்டால் யாரும் வேதனைப்பட மாட்டார்கள். தேர்தலில் பயன்படுத்த மட்டும்தான் விலை உயர்வு என்ற பிரச்னை பயன்படும். எனவே வாங்கும் சக்தியை அதிகரிக்கும் பொருளாதாரக் கொள்கையை நாடு பின்பற்ற வேண்டும். அப்படி பின்பற்றினால் விலைவாசி உயர்வினால் பெரும் பாதகம் ஏற்படாது.

எது முக்கியம்?:

மதவாத சக்திகள் ஆட்சியைக் கைப்பற்றக் கூடாது. அது தற்போது காங்கிரஸ் கட்சியால் மட்டுமே முடியும். மதவாத சக்தி வளர்ந்தால் பரவாயில்லை. விலைவாசி உயர்வைத் தடுக்காமல் இருந்த காங்கிரûஸ ஆள விடமாட்டோம் என்று கம்யூனிஸ்ட்டுகள் சொல்ல மாட்டார்கள். மதவாத மற்ற, மனித நேயமிக்க ஓர் ஆட்சி வரவேண்டும் என்பதில் யாருக்கும் இரண்டு கருத்துக்கள் இருக்க முடியாது.

மீண்டும் ஒரு அயோத்தி வர வேண்டாம்:

மதவாதத்தில் இருந்து மக்களை மீட்க வேண்டும். மீண்டும் ஒரு அயோத்தி, மீண்டும் ஒரு ராம ரதம், மீண்டும் அத்வானியின் புயல் வேகச் சுற்றுப் பயணம் என்று நாட்டில் ஏற்பட்டால் நாடு காடாகி விடும். அப்படி ஏற்படாமல் நாட்டைப் பாதுகாக்க வேண்டிய பெரும் கடமை நமக்கும் இருக்கிறது. அந்தக் கருத்துகளின் ஒற்றுமையில் தான் இந்தியா வாழ முடியும். வெல்ல முடியும். அப்படிப்பட்ட ஒற்றுமையை நாம் உருவாக்க வேண்டும்.

வெளிநடப்பு முறையல்ல:

மத்திய அரசு தவறு செய்கிறது என்பதற்காக, மாநில அரசைக் கண்டித்து வெளிநடப்பு செய்தது முறையல்ல. வெளிநடப்பு ஜனநாயக முறை என்பதால் அதற்காக நான் வருத்தப்படவில்லை.ஆளுங்கட்சியான திமுக வெளிநடப்பில் கலந்து கொள்ளக் கூடாது. நாம் அனைவரும் சேர்ந்துதான் ஓர் அணியை உருவாக்கி இருக்கிறோம். மதவாத சக்திகளுக்கு எதிரான இந்த அணியில் பிணி வந்துவிடக் கூடாது.

அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில் பிளவு ஏற்படாமல் பார்த்துக் கொள்ளும் பெரும் பணியை நான் மேற்கொண்டேன். அந்த உண்மையை நான் சொல்லி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியதில்லை. அந்த செய்திகள் பத்திரிகைகளில் வந்துள்ளன என்றார் முதல்வர் கருணாநிதி.

No comments: