சென்னை, ஏப். 23: விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை அடுத்த சங்கரலிங்கபுரத்தில் உள்ள தேவர் சிலையை உடைத்தது யார்? என்பது தொடர்பாக அதிமுக -கம்யூனிஸ்ட் உறுப்பினர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
மதுரை கோரிப்பாளையத்தில் தேவர் சிலை அவமதிக்கப்பட்டது தொடர்பாக கொண்டுவரப்பட்ட கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ ராமசாமி, "ராஜபாளையத்தை அடுத்த சங்கரலிங்கபுரத்தில் தேவர் சிலை சில மாதங்களுக்கு முன் உடைக் கப்பட்டது. மணல் எடுப்பதில் மாமூல் வாங்குவது தொடர்பான பிரச்னையில் அந்தச் சிலையை உடைத்தது அதிமுகவைச் சேர்ந்த ஊர் நாட்டாண்மையின் மகன்' என்றார்.
உடனே அதிமுக உறுப்பினர் கள் அனைவரும் எழுந்து நின்று ராமசாமி பேசியதை அவை குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று கோஷமிட்டனர். அப்போது அதிமுக கொறடா செங்கோட்டையன் எழுந்து, "அதிமுகவைச் சேர்ந்தவர்கள்தான் சங்கரலிங்கபுரத்தில் தேவர் சிலையை உடைத்தார்கள் என்று இந்திய கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ ராமசாமி பேசினார். அதனை நிரூபிக்க தயாரா? அதுவரை அவர் பேசியதை அவை குறிப்பிலிருந்து நீக்க வேண்டும்' என்றார்.
வை. சிவபுண்ணியம் (கம்யூனிஸ்ட்):
சங்கரலிங்கபுரத்தில் உள்ள ஊர் நாட்டாண்மையின் மகன்தான் அங்குள்ள தேவர் சிலையை உடைத்தார். அவர் அதிமுகவைச் சேர்ந்தவர்.
கே.ஏ. செங்கோட்டையன் (அதிமுக):
அதிமுகவைச் சேர்ந்தவர்கள்தான் தேவர் சிலையை உடைத்தார்கள் என்று சிவபுண்ணியம் அழுத்தம் திருத்தமாக சொல்கிறார். அவர் அரசுக்கு வக்காலத்து வாங்கட்டும் அதுபற்றி எங்களுக்கு கவலை இல்லை. ஆனால் இயக்கத்தை அவர் அவமதிக்கக் கூடாது.
முதல்வர் கருணாநிதி:
எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்த போது முத்துதேவன்பட்டியில் இப்போது மதிமுகவில் இருக்கும் ராமகிருஷ்ணனின் நிலத்தை வாங்கி எனது மகன் அழகிரிக்கு எழுதிக் கொடுத்ததாக இதே அவையில் அப்போது அமைச்சராக இருந்த குழந்தைவேலு குற்றம் சாட்டினார்.அதற்கான ஆதாரத்தைக் காட்டினால் நான் என் பதவியை ராஜினாமா செய்கிறேன்.
இல்லையெனில் குழந்தைவேலு அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றேன். இந்த சவாலை குழந்தைவேலு ஏற்றுக் கொண்டார். ஆனால் அவரால் ஆதாரத்தைக் கொடுக்க முடிய வில்லை. நானும் தினமும் கேட்டுக் கொண்டிருந்தேன். அதனால் அவர் ஆதாரத்தைக் கொண்டு வந்தார். அது போலி ஆதாரம் என்பதை அப்போதிருந்த பேரவைத் தலைவர் கண்டுபிடித்து எனக்கு சாதகமாக தீர்ப்பு தந்தார். ஆனாலும் குழந்தைவேலு ராஜினாமா செய்ய வில்லை. அதுபோன்ற ஒரு நிலைமை இன்று ஏற்பட்டுள் ளது.
செங்கோட்டையன் (அதிமுக):
நிரூபிக்க வேண்டிய பொறுப்பு யாருக்கு உள்ளது? சங் கரலிங்கபுரத்தில் தேவர் சிலை உடைக்கப்பட்ட வழக்கு போலீஸ் விசாரணையில் உள்ளது. முதல்வர் நினைத்தால் ஒரு நிமிடத்தில் கண்டுபிடித்து விடலாம்.
அமைச்சர் பரிதி இளம் வழுதி:
சரக்கு இருந்தால் சவால் விட லாம். இல்லையென்றால் சலாம் போட்டு ஓடி விட வேண்டும்.
அமைச்சர் துரைமுருகன்:
குற்றம் சாட்டிய உறுப்பினர் நிரூபிக்கிறேன் என்று பொறுப்பு ஏற்றுக் கொண்டால் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதுதான் மரபு.
ஓ. பன்னீர்செல்வம் (அதிமுக) :
ஆளும் கட்சியினர் பிரச்னையை தீர்ப்பதற்கு முயலாமல் மற்றவர்கள் மீது குற்றம் சாட்டுவது வேதனையைத் தருகிறது.
வை. சிவபுண்ணியம் (கம்யூனிஸ்ட்):
சங்கரலிங்கபுரம் ஊர் நாட்டாண்மை வேல்முருகனின் தம்பி மாரிமுத்துதான் தேவர் சிலையை உடைத்தார். அவர் அதிமுகவைச் சேர்ந்தவர்.
முதல்வர் கருணாநிதி:
சிவ புண்ணியமும், செங்கோட்டையனும் தங்களிடம் உள்ள ஆதாரங்களை என்னிடம் கொடுத்தால் நாளை எனது முடிவை அறிவிக்க தயாராக இருக்கிறேன்.
Thursday, April 24, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment