சென்னை, ஏப். 21: கம்யூனிஸ்ட்டுகள் கண்ணை மூடிக்கொண்டு மத்திய அரசை ஆதரிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் சட்டப் பேரவை கொறடா பீட்டர் அல்போன்ஸ் கூறினார். தமிழக சட்டப் பேரவையில் திங்கள்கிழமை இது குறித்து நடைபெற்ற விவாதம்:
பாலபாரதி (மார்க்சிஸ்ட்):
நாடாளுமன்றம் மற்றும் சட்டப் பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் சட் டத்தை உடனே நிறைவேற்ற மத்திய அரசை காங்கிரஸ் கட்சி வலியுறுத்துமா?
பீட்டர் அல்போன்ஸ் (காங்கிரஸ்):
பெண்களுக்கு நாடாளுமன்றத்திலும், சட்டப் பேரவைகளிலும் 33 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் சட்டத்தை வடிவமைத்தவர் ராஜீவ் காந்தி என்பதை மறந்துவிடக் கூடாது. இந்தியா முழுவதும், உள்ளாட்சி அமைப்புகளில் 33 சதவீதம் பெண்கள் பொறுப்பு வகிக்கின்றனர் இதற்கு காங்கிரஸ் கட்சி தான் காரணம். காங்கிரஸ் கட்சி தனித்து ஆட்சியில் இருந்திருந்தால் 33 சதவீத இட ஒதுக்கீடு சட்டம் நிறைவேற்றப்பட்டிருக்கும். எங்கள் நேரம் உங்கள் தயவில் எல்லாம் ஆட்சி நடத்த வேண்டி இருக்கிறது. மத்திய அரசை கம்யூனிஸ்ட்டுகள் கண்ணை மூடிக் கொண்டு ஆதரித்தால் இந்தச் சட்டத்தை உடனே நிறைவேற்றி விடலாம்.
நன்மாறன் (மார்க்சிஸ்ட்):
33 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு கம்யூனிஸ்ட்டுகள் இடையூறு செய்யவில்லை.
பீட்டர் அல்போன்ஸ் (காங்கிரஸ்):
பகுதி, பகுதியாக இடை யூறு என்பதெல்லாம் கிடையாது. கம்யூனிஸ்ட்டுகள் ஒட்டுமொத்தமாக இடையூறு செய்வதால்தான் மத்திய அரசால் செயல்பட முடியவில்லை.
கோவிந்தசாமி (மார்க்சிஸ்ட்):
நல்ல திட்டங்களை எப்போதும் கம்யூனிஸ்ட்டுகள் ஆதரிப்பார்கள். குறைந்தபட்ச செயல் திட்டத் துக்கு எதிராக காங்கிரஸ் அரசு செயல்படும்போது நாட்டு நலன் கருதி அதனை எதிர்க்கிறோம். கண்ணை மூடிக்கொண்டு மத்திய அரசை ஆதரித்தால் அமெரிக்காவிடம் இந்தியாவை ஒப்படைத்து விட்டால் என்ன செய்வது?
டி. சுதர்சனம் (காங்கிரஸ்):
இந்தியா எந்த நாட்டுக்கும் அடிமையாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை.
அமைச்சர் ஆர்க்காடு வீராசாமி:
காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்கள் இது பற்றி தனியாக ஒரு நாள் விவாதம் நடத்தலாம். சமூக நலத்துறை மானியக் கோரிக்கை மீது அமைச்சர் பதில் அளிக்க வேண்டியிருப்பதால் இத்தோடு முடித்து விடுவது நல்லது என்றார்.
Thursday, April 24, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment