Thursday, April 24, 2008

கழிவு நீரை அகற்ற புதிய இயந்திரம்

சென்னை, ஏப். 21: சென்னையில் கழிவு நீரை அகற்ற தூர் வாரும் இயந்திரத்தை ஊரக வளர்ச்சி, உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இது குறித்து தமிழக அரசு திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

2006-07-ஆண்டு உள்ளாட்சித் துறை மானியக் கோரிக்கையின் போது ரூ.3 கோடி செலவில் கழிவு நீரை அகற்ற பாதுகாப்பு உபகரணங்கள் வாங்கப்படும் என்று மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.அதன்படி சென்னை குடிநீர் வாரியத்தால் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டன. பணியாளர்கள் கழிவு நீரில் இறங்குவதைத் தவிர்க்க சிறப்பு இயந்திரங்கள் பயன்படுத்தப்படும் என்று பட்ஜெட்டில் நிதி அமைச்சர் க. அன்பழகன் அறிவித்தார்.

தற்போது சென்னை மாநகரில் சுமார் 2,671 கி.மீ. நீளத்துக்கு கழிவு நீர் குழாய்களும், சுமார் 77,081 கழிவு நீர் நுழைவாயில்களும், 185 கழிவு நீரேற்றும் நிலையங்களும் உள்ளன. கழிவு நீரை அகற்ற தூர்வாரும் இயந்திரங்கள் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த இயந்திரத்தின் மூலம் 32 அடி ஆழம் வரை உள்ள கழிவு களை அகற்ற முடியும். இந்த இயந்திரத்தின் மதிப்பு ரூ. 5,85,390. முதல் கட்டமாக மூன்று இயந்திரங்கள் வாங்கப்பட்டுள்ளன. இந்த இயந்திரத்தின் செயல்பாடுகளை மூன்று மாதம் ஆய்வு செய்தபிறகு மேலும் இயந்திரங்கள் வாங்கப்படும்.

இந்த இயந்திரத்தை திரு வல்லிக்கேணி வாலாஜா சாலையில் அமைச்சர் மு.க.ஸ்டாலின் துவங்கி வைத்தார். நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை செயலாளர் கே. தீனபந்து, சென்னை குடிநீர் வாரிய நிர்வாக இயக்குநர் சிவ்தாஸ் மீனா, செயல் இயக்குநர் சி. தங்கசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். .

No comments: